Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Aug 31, 2010

மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி!

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன்,                     மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

"ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும்போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும். இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.



கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே. சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன. (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.) பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம். சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர். இவ்வாறு, அரசு சாராத பொது மருத்துவமனையாகவும், சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும்.

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது, இக்கட்டுரையின் நோக்கமன்று. 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும். எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன. 'மாஷா அல்லாஹ்!' இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும். எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் யார் காரணம்? கேள்விகளால் கவலைதான் கூடிற்று! இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில், இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள். அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர். 'ஷிஃபா'வில் சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். 'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள். டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது. தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை. இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம். அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது. அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார். உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக்கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம். அவற்றுள் ஒன்று, நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும். சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது, நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது. தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும் புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில். நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில், 'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன:

      'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.

•       புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

•      'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

• ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

•     வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில், நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம். அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா? நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே. அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம். ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா? எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!


ஆக்கம்: அதிரை அஹ்மது


இந்த கட்டுரையை அதிரை சார்ந்த எல்லா வலைப்பூக்கள் மற்றும்  இணையதளங்களிலும் வெளியிடுமாறு கட்டுரையாளர் அவர்களால் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Aug 30, 2010

என்றும் இனிக்கும் ந‌ம் ப‌ழைய‌ ர‌ம‌ளான் மாத‌ நினைவுக‌ளிலிருந்து....‏

'வல்லாணாலையிலெ யாங்கம்மா இதெல்லாம்' என்று (மாப்பிள்ளை) சம்மந்தி வீட்டுக்காரர்கள் சம்பிரதாயத்திற்கு வாய்விட்டு சொல்லி வண்டி நிறைய                                                             விருப்பத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் நாசூக்காக‌ (இதே பாணியில் தானே சீர், சீராட்டுக்களையும், முழு வீட்டையும் பெண்வீட்டினரிடமிருந்து கேட்டு வாங்கினீர்கள் என்பது வேறு சமாச்சாரம்) வாங்கும் வாடா, சம்சாவுடன் வரும் கஞ்சி தான் அவ்வப்பொழுது இருவீட்டாருக்கு இடையில் கட்டப்பட்டுள்ள உறவுப்பாலத்தில் ஏற்படும் உரசல், விரிசல்களை கொத்தனார் யாருமின்றி சரிசெய்யும் சிமிண்ட் கலவை போன்றதாகும்.

மரியாதை இல்லாத 'வாடா'வாக இருந்தாலும் அதற்கும் மரியாதை கிடைக்கும் அவ்வேளையில்.

உள்ளூர் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ரமளானின் ஒரு மாதகாலம் ஊழலின்றி இனிதே அரங்கேறும். இவ்விளையாட்டுப்போட்டிகளுக்கு ஸ்பான்சர் யாருமில்லை. கோப்பைகளும் இல்லை. ஆனந்தமே அனைவரின் எதிர்பார்ப்பு.

புதுக்க‌விஞ‌ன் யாரேனும் இப்ப‌டி எழுதினாலும் எழுத‌லாம் "த‌னி ம‌னித‌னுக்கு க‌ஞ்சி கிடைக்க‌வில்லையெனில் இவ்வுல‌கினை ச‌பித்திடுவோம்" என்று. கார‌ண‌ம் ர‌ம‌ளானில் நோன்புக்க‌ஞ்சிக்கு அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப்ப‌டும்.

உண்மையில் நோன்பு திற‌ந்த‌தும் பெரும்பான்மையான‌ வீட்டில் இஞ்சை கொஞ்ச‌ம் த‌ட்டிப்போட்டு காய்ச்சி த‌ர‌ப்ப‌டும் 'தேத்த‌ண்ணி' த‌ரும் சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் இன்றைய‌ கால‌ உற்சாக‌ குளிர்பாங்க‌ள் த‌ந்திடுமோ?

வீட்டின் கொடியில் வெயிலில் உலருவதற்காக தொங்கிக்கொண்டிருக்கும் துணிகள் போல் 'கபாப்' க‌டையில் இரும்புக்க‌ம்பிக‌ளுக்கிடையே உஜாலா போடாம‌ல் வெறும் ம‌சாலா மட்டும் போட‌ப்ப‌ட்ட‌ க‌றித்துண்டுக‌ள் தொங்கிக்கொண்டிருக்கும். அதை நினைக்கும் பொழுதே பாக்கெட்டில் காசில்லாம‌ல் வாயில் எச்சில் ஊறும்.

அன்று ஓடி, ஆடி விளையாடிய‌ எத்த‌னையோ வ‌ய‌திற்கு மூத்த‌வ‌ர்க‌ள், இளைய‌வ‌ர்க‌ள் இன்று அட‌ங்கிப்போய் விட்டார்க‌ள். ஆம் ம‌ண்ண‌றையில் அமைதியாய் ம‌றைந்து போய் விட்டார்க‌ள்.

காக்கையின் எச்ச‌ம் போல் காண‌ப்ப‌டும் மடமட புது வேட்டியின் ச‌ரிவ‌ர‌ கிழிக்க‌ப்ப‌டாத‌ லேபில். அதை ப‌ட‌ப‌ட‌ உள்ள‌த்துட‌ன் ச‌ட‌ச‌ட‌ ப‌த்து ரூபாய் புது நோட்டு ச‌ட்டைப்பைக்குள் ப‌துங்கி இருக்கும்.

இன்று அர‌பு நாடுக‌ளிலிருந்து விடுமுறையில் பெருநாளை குடும்ப‌த்துட‌ன் கொண்டாடிட எப்படியும் ஊர் செல்ல‌ திட்ட‌மிட்டிருப்ப‌வ‌ர்க‌ள் இணைய‌ த‌ள‌ங்க‌ள் மூல‌மாக‌வோ அல்ல‌து விமான‌ப்ப‌ய‌ண‌ச்சீட்டு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜென்ட்க‌ள் மூல‌மாக‌வோ த‌ன் ப‌ய‌ண‌த்தை முன் ப‌திவு செய்ய‌ ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன் செய‌ல்ப‌டுவ‌ர். இந்த‌ ப‌ர‌ப‌ர‌ப்பை அன்றே நாங்க‌ள் பெருநாளைக்கு நாள் வாட‌கைக்கு சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற‌ 'ப‌ரிதா' ம‌ற்றும் 'வின்ன‌ர்' சைக்கிள் க‌டைக‌ளில் காட்டி இருக்கிறோம்.

பெருநாள் இரவு சைக்கிளில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ட்டுக்கோட்டை சென்று வ‌ந்தால் ஏதோ பாருல‌கை சுற்றி வ‌ந்த‌து போல் எண்ணிப்பெருமித‌ம் கொள்வோம்.

உள்ளூர் தையல்கடைகளில் இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செல்ல‌ விசா வ‌ழ‌ங்கும் அய‌ல்நாட்டுத்தூத‌ர‌க‌ங்க‌ளில் காத்துக்கிட‌க்கும் ம‌க்க‌ள் போல் காத்துக்கிட‌ந்தோம்.

கால‌ங்க‌ள் ப‌ல‌ ஓடி விட்டாலும் ந‌ம் நினைவுகள் இன்றும் க‌யிறால் செய்ய‌ப்ப‌ட்ட அதே ர‌யில் வ‌ண்டியில் ஏறி ராஹ‌த்தாக‌ சுற்றி வருகிற‌து இராப்ப‌க‌லைத்தாண்டி. (நென‌ப்பு தான் பொழ‌ப்பெக்கெடுத்துச்சாண்டு யாரும் சொல்ல‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்).

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொட‌ரும் இறைவ‌ன் வாய்ப்ப‌ளித்தால்.

--மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Aug 29, 2010

கல்விக் களவாணிகள் : உரத்த சிந்தனை: சிராஜ் சுல்தானா‏

"கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாடல் பாடிய பாரதி, இன்று இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.                                 அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது. அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, "கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், "கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.

பண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.

மனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர். போலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது? தமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது? சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.

மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.

* மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.

* கடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.

* விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.

* விடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

நன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர்? தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது? கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.

மொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். "மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். "மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...

நவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி நாட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.

- சிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்
   நன்றி: Dinamalar

தகவல்: மு செ மு நெய்னா முகம்மது

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்!

புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை.                               பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் கூட பட்டிணிபோட்டு வறியவர் படும் துன்பத்தினை வள்ளலுக்கும் உணர்த்தும் அரிய ஒரு மகத்துவம் புனித ரமலான் நோன்பு ஆகும். ஈகையினை உள்ளத்தில் உதிக்கச் செய்து எப்படி பாலைவனத்தின் மணலைத் தோண்டும் போது நீர் சுரக்குகிறதோ அதே போல இல்லாதவருக்கு ஜக்காத், சதக்கா போன்ற கொடையினை அள்ளி அள்ளி வழங்கத் தூண்டும் ஒரு சிறந்த பண்பான கடமைதான் நோன்பு. ஆனால் எத்தனை வள்ளல்கள் தனது செல்வங்களை ஏழை, எளியவர்க்கு வாரி வழங்குகிறார்கள்? நமது சமுதாயத்தில் செல்வந்தர்கள் இல்லையா? ஏன் சகர் நேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் தங்க நகைகடை, ரியல் எஸ்டேட்ஸ், லாட்ஜ், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள், கோரியர் சர்வீஸ்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம், பொது விளம்பரத்தில் தடுக்கப்பட்ட பீடி-பாக்கு நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே டாக்கடர் பட்டம் சூட்டிக்கொள்ளும் யுனானி மருத்துவ மாமணிகள், கல்வி நிறுவனம் நடத்தும் வள்ளல்கள் போன்ற செல்வந்தர்கள் பட்டியல் வரிசை நீண்டு கொண்டே போகிறது.. சகர் நேரத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கால் வாசி விளம்பரங்கள் முக்கால்வாசி என்று சொல்லும் அளவிற்கு விளம்பரம் செய்யும் செல்வந்தர்கள் நம்மிடையே இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நோன்பு நேரத்தில் தங்கள் செல்வத்தினை கணக்கிட்டு ஜக்காத், சதக்கா கொடுக்கிறார்களா என்றால் சந்தேகமே! அவர்கள் கொடுப்பதெல்லாம் நோன்பு நேரத்தில் கையேந்துபவர்களுக்கு காசு, குறைந்த விலையில் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வெறும் தர்மம் செய்ததாக ஜம்பம் அடிப்பார்கள். அது தான் உண்மையிலே ஏழைகளுக்குச் செய்யும் தொண்டா?

ஓரு உண்மை சம்பவத்தினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் வாழும் எனது தூரத்து அட்வகேட் உறவனர் மகள் பிளஸ்2 பரீட்சையில் 1200 மார்க்குக்கு 1148 மார்க் வாங்கி பள்ளியிலே முதலாவதாகத் தேறியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அதிக கட்டாப் மார்க் இருப்பதால் நிச்சயம் அரசின் ஒதுக்கீடிலே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் அவள் ஒரு முஸ்லிம் இன்ஜினீரியங் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என தீர்மானித்து அந்தக்கல்லூரிக்கும் மனு செய்தார். இண்டர்வியூக்கும் தந்தையினைக் கூட்டிச் சென்றாள். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் எத்தனை லட்சம் டொனேசன் தருவீர்கள்? என்பது தான். அந்தப் பெண்ணின் தந்தையே என்மகள் நல்ல மார்க்கில் தேர்வாக உள்ளாள் அவள் மற்ற கல்லூரிக்கு அரசு ஒதுக்கீடு இலவச சீட்டில் செல்வதிற்குப் பதிலாக முஸ்லிம் கல்லூரியில் படிக்க விரும்புகிறாள் ஆகவே அவளுக்கு ஃபிரீ சீட் தாருங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் பல லட்சம் டொனேசன் கேட்டதால் அதனை மறுத்துவிட்டு அரசு ஒதுக்கீடு செய்த வெங்கடேஸ்வரா இன்ஜினீரயங் கல்லூரியில் சேர்ந்து முதல் வகுப்பிலும் தேரி டி.சி.எஸ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளாள.. இது எதனைக் காட்டுகிறது.? ஏழை முஸ்லிம்களுக்காக மைனாரிட்டி கல்லூரி நடத்துகிறோம் என்று லட்சத்தில் பணம் அள்ளும் முதலைகளாக அந்த வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் விமரிசையாக வள்ளல் என போட்டு நோன்பின் மாண்பு-மகிமையினை பாழடிக்கிறார்கள் என்றால் மிகையாகுமா? அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஒரு ஏழை முஸ்லிம் கிராமத்தினை தத்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து முன்னேற ரூ10000 வீதம் 100 குடும்பங்களுக்குக் கொடுத்து தன்னிறைவு பெற உதவுகிறார்கள். அது போன்று ஏழைக் குடும்பங்கள் முன்னேற எதாவது நிலையான திட்டங்கள் எவராலும் செய்யப்பட்டுள்ளதா? நகை வியாபாரிகள் நூறு ஏழைக்குமர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குமருக்கும் ஒரு பவுன் தாலிச் செயின் மற்றும் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய திருமணத்தினை நடத்தித் தரக்கூடாது? மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் சிறப்பான கல்வித் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ்-டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி பரீட்சை எழுத பயிற்சி அளிக்கக்கூடாதா? எப்படி முன்னாள எம்.எல்.ஏ சைதை துரைசாமி மட்டும் அவ்வாறு இலவச பயிற்சி கொடுத்து வருடா வருடம் 100க்கு குறையாத மாணவர்களை முதன்நிலைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய முடிகிறது? ஏன் குடி தண்ணீர் சப்ளை விளம்பரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கேன்கள் குடி தண்ணீர் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி-மதரஸாவிற்கு இலவச தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது? அதுபோல் கூரியர் சர்வீஸ்-டிராவல்ஸ்-ஹோட்டல்ஸ் நடத்தும் உரிமையாளர்கள் அரசு பரிட்சை எழுத வரும் மாணவர்கள் தங்கி பரீட்சை எழுத இலவசமாக வாகனம்-இடம் கொடுக்கக்கூடாது? டீ.வி. நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப்பிரியர் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நாம் சமைத்துசாப்பிட ‘பைத்துல்மால்’ அமைப்பினை ஏற்படுத்தி தங்களுடைய முகங்களை பலருக்கு பளிச்சென்று வெளிச்சம் போட்டு பறையடிக்கிறார். அதுதான் இஸ்லாம் சொன்ன தான தர்மமா?

உதவும் கரஙகள் எப்படி இருக்க வேண்டும் என்பதினை; இரண்டு சம்பவங்களினை மட்டும் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம் என நினைக்கிறேன்:

1) படத்தில் உள்ள கனடா நாட்டு பிரதமர் மார்ட்டினுடன் தலை நிமிர்ந்து நிற்கும் சிறுவன் யார் தெரியுமா ‘யூனிசெப்’ ஜக்கிய நாடு குழைந்கைகள் படிப்பு- சுகாதாரம் பாதுகாப்பிற்கான ஒரு சபையாகும். அந்த சபையால் கவுரவ அம்பாசாடர் என்ற பட்டம் வழங்கப்பட்ட கனடா நாட்டு இந்திய வம்சா வழி பதிமூன்றே வயதான அம்மான் என்ற தந்தைக்கும், சமீம் என்ற தாய்க்கு மகனாகப் பிறந்த அருந்தவப் புதல்வன் தியாகச் செம்மல் ஹஜரத் பிலால் அவர்கள் பெயரைத் தாங்கியவன். அவன் அப்படியென்ன அருஞ்செயல் செய்தான் என நீங்கள் கேட்க உங்கள் ஆவல் தூண்டும். இந்திய நாட்டில் குஜராத்தில் புர்ஜ் நகரினை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் சொன்னது போல புரட்டிப்போட்டு மாடி வீடுகளெல்லாம் மண்ணாகி பலர் மடிந்தும் போன கதை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது கனடா தலைநகர் டொரனடாவில் வசித்த அந்தச் சிறுவனுக்கு வயது நான்குதான். அந்த பூகம்பத்தினை தொலைக்காட்சியில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அதிர்ச்சியிட்டு மிகவும் துயரம் அடைந்தான்.

அன்றிலிருந்து அவன், அவனது பொற்றோர் மற்றும் பாட்டனாருடன் தெருவில் இறங்கி ஆரஞ்சு பழங்கள் விற்று அதன் மூலம் கிடைத்த 332 டாலர்களை யூனிசெப் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு எட்டு வயதான போது 2004 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது தன் தந்தையின் ரொட்டிகளை எடுத்து தெரு தெருவாக விற்று அதில் கிடைத்த வருமானத்தினை அந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். அதன்பின்பு ஆப்பிரக்கா நாட்டு குழந்தைகள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து காகித தட்டுகளை செய்து விற்று அதன் மூலம் கிடைத்த 1100 டாலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். இது போன்ற உதவிகளை செய்ய ‘ஹேண்ட் பார் ஹெல்ப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவியும் உள்ளான். 2009ஆம் அண்டு ‘கால் நடை இயக்கம் ஒன்றை’ ஆரம்பித்து தன் பள்ளித் தோழர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கனடா தலைநகர்டொரண்டோவில் உள்ள பூங்கா, சூப்பர் மார்க்கட், கல்வி நிறுவனங்களுக்கு கால் நடையாக சென்று வசூலித்து அதனை உலக குழந்தைகள் கல்வி, சுகாதாரம், பசி, பட்டிணி போக்க உதவியும் உள்ளான். அவன் அளித்த உதவித் தொகை எவ்வளவு தெரியுமா சொந்தங்களே? 5மில்லியன் டாலர் தொகையாகும். தற்போது அடில்லாலானி என்ற 20 வயது வாலிபருடன் சேர்ந்து சுடோகோ.காம் என்ற விளம்பர இணைய தளத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை ‘வோல்ட் புட் பரோகிராம்’ அதாவது உலக உணவுக்கழகத்தின் பசி போக்கும் திட்டத்திற்கு உதவி வருகிறான் என்றால் பாருங்களேன். ஒரு முஸ்லிம் சிறுவனால் செய்ய முடிந்ததினை நான் மேற்கோடிட்டுக் காட்டிய செல்வந்தர்களால் ஏன் முடியாது முஸ்லிம் ஏழை மக்களுக்கு, ஏழை குமர்களுக்கு, அனாதை சிறுவர்களுக்கு, அறிவுசால் மாணவர்களுக்கு வாழ்வில் ஓளியேற்ற?

2)அடுத்த ஒரு சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 2000 பேர் இறந்தும், 1.கோடியே எழுபது லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை தினந்தோறும் பத்திரிக்கை-எலக்ரானிக் மீடியாக்கலில் பார்த்து-படித்து தெரிந்திருப்போம். அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் சர்தாரி கட்சியும், எதிர்கட்சியான எம்.க்யூ.எம் சட்சிகள் செய்த உதவி தலா 5 மில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் ஹாலிவுட் நடிகை ஆஜ்லினா ஜோஸி செய்த உதவி 8 மில்லியன் டாலர் ஆகும். சொந்த நாட்டினர் தனிப்பட்டு செய்த உதவியினை விட ஒரு தனிப்பட்ட அயல் நாட்டுப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்தாளென்றால் ஏன் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் நோன்பு நேரத்தில் கூட இது போன்ற உதவியினைச் செய்யக்கூடாதா என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் நாம் மட்டும் மகிழ்வுடன் இருக்கக்கூடாது மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்தக்கட்டுரை எழுதினேன்.

-- முகம்மது அலி ஐ.பீ.எஸ் (ஓ)
 
நன்றி: முதுவை ஹிதாயத்

Aug 27, 2010

நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள் - ரமழான் சிந்தனை

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், இப்புனித ரமழான் மாதத்தில், ரமழான் சிந்தனை என்ற தலைப்பில் நல்ல சிந்தனை தூண்டும் மார்க்க செற்பொழிகளை                                                   மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து இங்கு பகிர்ந்துக் நாமும் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக பதியப்பட்டுவருகிறது.

 இதன் தொடர்ச்சியாக நம் உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களின் இறுதி நாட்களைப் பற்றி மிக அற்புதமான குரல் வலத்தில், அனைத்து தரப்பட்ட மக்களின் மனதில் எளிதில் புரியும்படியான ஒரு வரலாற்று ஆடியோவை “ நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள்” எனற தலைப்பில் கீழே வெளியிடுகிறோம். கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Please download if you don not have  REAL MEDIA PLAYER to hear this audio.

To download this audio please visit this link http://www.islamkalvi.com/history/raheeq_audio/043.rm





To download this audio please visit this link https://sites.google.com/site/tjdn77/adirainirubar/043%283%29.mp3


இந்த ஆடியோவை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனதை உருக்கும் நிகழ்வு.

மேலே உள்ள ஆடியோ உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற “இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற நூலின் ஆடியோ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆசிரியர் : இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில் : மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

Books and MP3 CDs are Available at : Darul Huda, New No. 211(102), First Floor, Linghi Chetty St., Chennai - 600 001.

முழு வரலாறு ஆடியோ தொகுப்பை (real media files) தரவிரக்கம் செய்ய இங்கு சென்று http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm  தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

இந்த அற்புதமான வரலாற்று தொகுப்பை இவ்வுலகிற்கு தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நல்ல விசயங்கள் எங்கேல்லாம் இருக்கிறதோ அவைகளை மட்டும் நாம் தேர்ந்தேடுத்து, கேட்டு, பிறருக்கும் எடுத்துச் சொல்லி, நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடைய செய்யலாமே.

ஆக்கம்: அதிரைநிருபர் குழு

Aug 26, 2010

பத்ரு களம் - நினைவு கூறுவோம்.

ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு யுத்தம்.
                                                                                                                                       
பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம்  ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள்  எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 என்றும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...

மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.


பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)

03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)

04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)

05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)

06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)

07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)

08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)

09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)

10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)

11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)

12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)

13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)

14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

பதிருப் போர் பற்றிய பயான் கோட்டுப் பாருங்கள், கண்ணிர் வராதவருக்கும் வந்துவிடும்.

பகுதி 1 http://www.islamkalvi.com/media/iyub41/audio1.mp3






பகுதி 2 http://www.islamkalvi.com/media/iyub41/audio2.mp3



நன்றி-இஸ்லாம் கல்வி

போர் நடந்த அந்த இடங்களின் படங்களை கீழே பாருங்கள்

On 17th Ramadan Year 2nd of Hejra, Prophet Mohammad (PBUH) came to BADER from MADINA With around 300 of his Followers from the way shows in picture (Red Arrow).


Prophet Mohammed (PBUH) Camp with his Army in this Area and The Hill in the Picture is Called (Odoat Al Dunea)
Right Arrow Shows (Al Odoat Al Dunea) and on versant of it Muslims Camp, Middle Arrow Shows the way which ABO SOFEAN Convoy pass all the way through and Left Arrow Shows Malaeka mountain  (where JEBREAL and MEKAEAL sent By ALLAH with 1000 Of Malaeka to help Muslims Army against Unbelievers.)


This is where Muslims Army moved to where BADER WELL was at the back of them

A different picture angle of (Al Odoat Al Dunea) and Malaeka Mountain and the new camp area where Muslims moved to.



The Arrow shows the place of the Followers Graves

BADER THE OLD TOWN

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான பத்ரு தற்காப்பு யுத்ததையும், பத்ரு யுத்தப் போராளிகளை நாம் நினைவு கூர்ந்து நம்முடைய தக்வாவை அதிகரிக்க முயற்சி செய்யலாமே.... அல்லாஹ் போதுமானவன்.

ஆக்கம்: அதிரைநிருபர் குழு

நன்றி: சுவனத்தென்றல், சகோ.இஸ்மத் வலைப்பூ

Aug 24, 2010

என்றேனும் சிந்தித்ததுண்டா எதிர்கால வீட்டைப்பற்றி?...

சற்று நேரம் நம் அன்றாட அலுவல்களை நிறுத்தி விட்டு நமக்கு நாமே இந்த கேள்வியை
                                                              
 என்றைக்கேனும் கேட்டிருக்கிறோமா எதிர்கால வீட்டைப்பற்றி?

மண்ணறையில் (கப்ரில்) எனக்கு முதல் இரவில் என்ன நடக்கப்போகிறது?

நான் அதற்காக என்ன தயார் செய்து வைத்திருக்கின்றேன்?

நான் சொர்க்கத்தில் இருப்பேனா? இல்லை நரகத்தில் இருப்பேனா?

எவ்வாறெல்லாம் நான் மரணத்தை அடிக்கடி வாழ் நாளில் நினைவு கூர்ந்தேன்?

சற்று சிந்தித்த பொழுது மய்யித்தான உடல் நன்கு கழுவப்பட்டு கப்ருக்கு எடுத்து செல்ல தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்த நாள்/நேரம் வரும் பொழுது உடலை மக்கள் (உற்றார், உறவினர்) சுமந்து நமக்கான மண்ணறைக்கு எடுத்துச்செல்வர்.

குடும்பத்தினரின் அழும் குரல்களுக்கிடையே உடல் மண்ணறையில் இறக்கி வைக்கப்படுகிறது.

சற்று சிந்திப்போம் நமக்கு நாமே...மண்ணறையைப்பற்றி. ஆம் நிச்சயம் அது ஒரு இருண்ட மரணப்படுகுழி தான் சந்தேகமில்லை.

தனிமை...இருள் சூழ்ந்த இருட்டறை...உதவிக்காக அழுதிடுவோம் நம் அழுகுரல் யாருக்கும் கேட்காமலேயே...யாரும் நமக்கு உதவிட இயலாது..அந்தோ பாவம் நம் வேதனைகளும் உலகுக்கு சொல்ல விரும்பும் உண்மைகளும் யாரும் அறிந்திடமாட்டோம்... உடலின் எலும்புக்கூடுகள் நெருக்கப்படும்/நொறுக்கப்படும் அவ்வேளையில்...

நிச்சயம் வருந்துவோம் நாம் வாழ்நாளில் செய்த எல்லாத்தீய காரியங்களை எண்ணி...வருந்துவோம் பொடுபோக்காக காரணமின்றி விடப்பட்ட ஐங்காலத்தொழுகையை எண்ணி....

வருந்துவோம் உலகில் இன்னிசைகளை தன் செவியில் தன்னை மறந்து கேட்டனுபவித்ததற்காக...

வருந்துவோம் நம் அவமரியாதையான குணத்தை பிறர் மீது காட்டியதற்காக குறிப்பாக பெற்றோர்களை அவமரியாதை செய்ததற்காக...

பெண்கள் வருந்துவார்கள் தன் மேனியை உலகம் பார்த்து மகிழ ஹிஜாப் அணியாமல் சுற்றித்திரிந்ததற்காக...

வருந்துவோம் இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காமல் விட்டதற்காக....

வருந்துவோம் மார்க்க அறிவை பெறாமல் உதாசீனப்படுத்தியதற்காக...

நிச்சயம வருந்துவோம்...நம் எல்லா துர்குணங்களுக்காகவும், செய்த தீய காரியங்களுக்காகவும்...

அங்கு தப்பிக்க வழியில்லை...கைக்கொடுக்க ஆட்கள் இல்லை...சிபாரிசு செய்ய நாதியில்லை...எல்லா தீய காரியங்களுக்காக தண்டணையை அனுபவித்தே தீர வேண்டியுள்ளது. தனிமையாக்கப்பட்டோம் நம் அமல்களுடன்... அங்கு பணமில்லை, ஆபரணஙகளில்லை... ஒன்றுமில்லை.... நம் அமல்கள் மட்டும்...

மரணப்படுகுழி மூடப்படும் பொழுது... அலறிக்கொண்டே நம்மைவிட்டு செல்பவர்களிடம் கெஞ்சுவோம்...என்னவர்களே தயவு செய்து என்னை தனியே விட்டு, விட்டு போகாதீர்கள். என் மரணப்படுகுழி அருகிலேயே இருங்கள்...யார் கேட்பார் உயிரற்ற உடலின் உள்ளக்குமுறலை...

ஆனால் நம் கதறலை எவரும் கேட்டிலர்...அவர்கள் வந்த வேலை முடிந்தவர்களாய் திரும்பி செல்ல அடி எடுத்து வைப்பதை நாம் செவியுறுவோம்... கதறுவோம்.

நாம் நினைத்தோம் ஒரு போதும் இவ்வுலகை விட்டு செல்லமாட்டோமென்று.  நாம் நினைத்தோம் நம் நண்பர்கள், உறவினர்களுடன் என்றும் நிலைத்திருப்போமென்று. நாம் நினைத்தோம் என்றுமே மகிழ்ச்சிக்கடலில் மிதப்போமென்று...இல்லை...நாம் நினைத்ததில் உண்மையேதுமில்லை... முற்றிலும் தவறானதைத்தவிர....வந்தவர்கள் சென்றுவிட்டார்கள் வந்த வேலை முடிந்தவர்களாய்...தனிமையில் இருளில் அகப்பட்டுக்கொண்டோம்... தினம், தினம் இன்றே சிந்தித்திடுவோம்... நம் எதிர்கால வீட்டைப்பற்றி.... அங்கே நேர்த்தியான வீட்டைப்பெற இங்கு நம் வாழ்நாளில் உழைத்திடுவோம்...

நாம் ஒரு போதும் இதை உதாசீனப்படுத்திட இயலாது. இது நம் நினைவில் என்றும் வந்து போகும் ஒன்றாகட்டும்...ஒவ்வொரு தடவை தவறுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்பொழுதெல்லாம் நாம் இந்த நினைவை முன்னிறுத்தி தடுத்திடுவோம் தவறுகளை தகர்த்தெறிவோம் தீய துர்க்குணங்களை..நினைத்திடுவோம் அணுதினமும் தற்காலிக சந்தோஷங்களுக்கு நிரந்தர ஆப்படிக்கும் இந்த அழையா விருந்தாளியை (மரணம்) ஒரு போதும் மறந்திடல் வேண்டாம்...

"ஏழையாக நாம் பிறந்தது நம் தவறல்ல; மாறாக இறுதியில் ஏழையாக நல்ல அமல்களின்றி வெறுமனே செத்து மடிவது நிச்சயம் நம் தவறே".

அல்லாஹ் இப்புனித ரமளானின் பொருட்டு காலஞ்சென்ற நம் எல்லாக்கப்ராளிகளின் கப்ருகளை சொர்க்கத்தின் பூஞ்சோலைகளாக்கி எஞ்சியுள்ள நம் யாவரின் இறுதிப்பயணத்தை இனிய பயணமாக்கி தந்தருள நாமெல்லாம் நம்மைப்படைத்தவனிடமே இறைஞ்சிடுவோம்....

எனக்கு வந்த ஒரு மின்மடலின் தோராயமான தமிழாக்கம்.. தயவு செய்து இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.


-- மு சே மு நெய்னா முகம்மது

Aug 22, 2010

மதீனா நேரலை - வலைத்தளங்களுக்காக

அன்பானவர்களே, புனித மதீனாவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                                  


மதீனா நேரலை





மதீனா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html scriptயை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.



உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.

-அதிரைநிருபர் குழு

நன்றி: அப்துல் ரஹ்மான்

மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக

அன்பானவர்களே, புனித மக்காவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                        


மக்கா நேரலை




மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.


உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.

-அதிரைநிருபர் குழு

நன்றி: அப்துல் ரஹ்மான்

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான                         நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்ப‌ உட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாக‌ ஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையான‌ வேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்கள். ( அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை செய்தியை காணுங்கள்) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ந‌ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

--மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Aug 21, 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை



1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)   
                 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

- K.L.M இப்றாஹீம் மதனி

Courtesy: Readislam.net

இந்த அருமையான கட்டுரையை தொகுத்தளித்த கட்டுரையாளருக்காக துஆ செய்வோமாக.

Aug 20, 2010

ரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்

அன்பானவர்களே, இப்புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து முடிந்து  இரண்டாம் பத்துக்கு செல்ல உள்ளோம்,                                                                                 எம் மனதில் தோன்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்வது நல்லது என்று கருதுகிறோம்.

மற்ற நாட்களைவிட ரமழான் மாத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்படுவது சகஜம் என்றாலும் நம் சகோதரர்கள் ரமழானுடை பண்புகள் தெரிந்திருந்தும் சில நேரங்களில் நிதானம் இழந்துவிடுகிறார்கள்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவ செயல்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமழான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.

இந்த அவசர உலகில் நம் மக்கள் குறிப்பாக வேலைகளுக்கு வாகனங்களில் செல்லும் நம் நோன்பாளிகள் நேரமின்மையை கருத்தில் கொண்டு நிதானம் இழந்து அவசரத்தில் வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள். அரபு நாடுகளில் வேலைகளில் இருக்கும் நிறைய சகோதரர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களாகவும், நான்கு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களாகவும் உள்ளார்கள். வருடா வருடம் தினமும் எம் கண்முன்னே சாலை விபத்துக்கள் அதிகம் ரமழான் மாதத்தில் தான் காணமுடிகிறது. விபத்துக்கு காரணமானவர் பாதிக்கப்படுவதைவிட  விபத்துக்கு காரணமில்லாத அப்பாவிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

குறிப்பாக ரமழான் மாதத்தில்  நேரமின்மை  என்ற  காரணத்தால்   பல சகோதரர்கள் நிதானமிழந்து சாலைகளை முறையில்லாமல் கடக்கும் போதும் அதிகம்  விபத்துக்கள் அன்றாடம் நடைப்பெருகிறது. இது மிகவும் வேதனையான செய்தி. சந்தோசமாக இபாதத்து செய்யக்கூடிய மாதத்தில் சாலை விபத்துக்கள் போன்ற துக்க செய்திகளை கேட்காத நாளே இல்லை. அல்லாஹ் நம்மையும், நம் மக்களையும் காப்பாத்துவானாக.

வாகன ஒட்டிகள் ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது மற்ற எல்லா நாட்களிலும் நிதானதமாக வாகனங்களை ஓட்டி தங்களின் பாதுகாப்பையும், அடுத்தவர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும்.

எமது சமூகத்தவர்களில் பலர் புகைப்பிடித்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.

சரியான முறையில் ஸஹர்-நோன்பு துறப்பு உணவுப் பழக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்?

செரியாமை: நாள்முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் இரைப்பை திடீரென்று பல்வகையான உணவுப் பொருட்கள் திணிக்கப்பட்டால் திணறித்தானே போகும்? அளவான, சத்து நிறைந்த உணவே நோன்பு துறக்க மிக உகந்ததாகும்.

மலச்சிக்கல்: சரியான அளவில் நார்ச்சத்து இல்லாத பொறித்த தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் அதிக அளவில் உட்கொள்வதால் மலச்சிக்கல் வரும்.

சோம்பல்: திடீரென்று உட்கொள்ளப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நாள்முழுவதும் இருந்த பட்டினியால் குறைந்த குருதி அழுத்தத்துடன் இணைந்து சோம்பல் உணர்வைத் தூண்டும்.

தலைவலி: சரியான முறையில் உறக்கச் சுழற்சியை வகுத்துக் கொள்ளாவிட்டால் தலைவலி வருவதைத் தவிர்க்க இயலாது.

தசைப்பிடிப்பு: சரியான அளவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ள உணவை நோன்பு துறக்கப் பயனபடுத்தாவிட்டல் தசைப்பிடிப்பு ஏற்படும்.

உறக்கமின்மை: ஒவ்வொருவர் உடலுக்கும் தக்கவாறு தேவையான உறக்கத்தை நல்லமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். (இரவு வணக்கங்கள், அருள்மறை ஓதுதல், அன்றாடப் பணி இவற்றுக்கு நேரம் திட்டமிடுதலைப் போலவே)

நிதானத்துடன் ஆரோக்கியமான வழியில் நோன்பு மேற்கொண்டு மனநலத்தில் மட்டுமின்றி உடல்நலத்திலும் சிறந்தவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

Aug 18, 2010

கல்வி விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு - அதிரை இளைய சமுதாயத்திற்காக

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும் கட்டுரைக்கு                  உண்மையில் நல்ல வரவேற்பும் ,அக்கறையுள்ள பின்னூட்டங்களும்    என்னை மிகவும் சிந்திக்க வைத்ததின் விளைவே " வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம் ". என்று நம்மவர்களை அழைக்க தூண்டியது. அல்லாஹ்வின் அருளால் அதிரை நிருபரின் அனைத்து வாசகர்களும் இதற்கு துணை வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிளஸ் டூ பாடத்திட்டம் அறிமுகம் ஆனபோதே நாம் கல்வியில் விழிப்புணர்வு பெற்று விட்டோம் , ஆனால் நாம் அதில் மேம்பாடு அடைந்தோமா என்றால் சட்டென்று ஆம் என பதிலுரைக்க யோசிக்கவே செய்வோம். அதற்கான முயற்சியை நமதூரில் இயங்கிவரும் பள்ளிகள் செய்கின்றனவா என்பது நான் அறிந்த வரையில் கேள்விக்குறியே.

(பள்ளிகளின் முயற்சி என நாம் குறிப்பிட விரும்புவது , வகுப்பில் முதல் ஐந்து ரேங்க் எடுக்கும் மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் அதன் நிர்வாகிகளின் அதீத முயற்சியால் அவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது.)

நம் சமுதாய வாழ்வுரிமைக்காக பல இயக்கங்கள் நடத்திய பதினைந்து ஆண்டுகால போராட்டங்களின் பயனை அடையும் ( இன்ஷா அல்லாஹ் ) காலம் வெகு தொலைவில் இல்லை என்றே நம் மனது சொல்கிறது. சமுதாயத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்காக இத்தருணத்தில் துஆ செய்வது நம் கடமை.

இட ஒதுக்கீடு கிடைத்தது , அதற்கு நாம் லாயக்கு இல்லை அல்லது அதை நிரப்ப நமக்கு தகுதி இல்லை என்றாகிவிட்டால்...... நினைத்து பாருங்கள், இந்த நிலைமை அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் புரிந்துவிட்டால், காவிகளால் கட்டுண்டு இருக்கும் அரசு இயந்திரம் இன்னும் பலத்துடனும், முழுமூச்சுடன் நமக்கு எதிராக செயல்படும். அரசும் அதன் இயந்திரமும் கடந்த காலங்களிலும் தற்போதும் எப்படி எல்லாம் நமக்கு எதிராக செயல்பட்டன , செயல்படுகின்றன என விளக்க வேண்டியதில்லை.

நாம் எல்லோருமே பெரும்பாலும் அயல் நாட்டு சம்பாத்தியத்தை விரும்புகிறோம் அது தவறல்ல, ஆனால் இங்கே பெரும்பாலானோர் என்ன வேலை செய்கிறோம்? தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் பெரும்பாலான நம் படித்தவர்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத துறைகளுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை . அதே வேலையில் நம் சகோதர சமுதாய மக்களை பாருங்கள் மிக உயர்ந்த பதவிகளிலும் , அதிகமான பொருளாதார வசதியுடனும் இருக்கிறார்கள் . நம்மவர்கள் சாதாரண வேலை , சொற்ப வருமானத்திலும் இருக்கிறோம். அப்படி நாம் திரட்டும் செல்வம் எப்படி வீணாகிறது என்பதை சகோதரர்கள் ஜாஹிரும், மு.செ.மு.நெய்னாவும், நம் எல்லோர் சார்பாகவும் மிகத்தெளிவாக தங்களின் கட்டுரைகளில் பதிந்திருந்தார்கள்

எதிர்கால நம் சந்ததிகளுக்காக இப்போது நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்பது காலத்தின் கட்டாயம், நம் மாணவச் செல்வங்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியாளர்களை கொண்டு முறையான பயிற்சி அளிக்க நாம் எல்லோரும் கைகோர்க்க வேண்டும்.

சில திட்டங்கள், அதிரை நிருபர், அதன் வாசகர்களின் ஆலோசனைகளை எதிர்பார்த்து வைக்கப்படுகிறது.

1 . நம்முடைய முதல் சிறிய இலக்கு தற்போது பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களில் முதல் ஐந்து இடங்களை காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் எடுப்பவர்களை ( காதிர்முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன், ALM மற்றும் லாரல் மேல்நிலை பள்ளிகளில் பயில்பவர்கள் - நம் சமுதாய மாணவர்கள் மட்டும் )  தேர்ந்த்தேடுப்பது.

2 . இவர்களுக்கான பயிற்சி முகாம்களை தொடர்ந்து வருடத்தில் இரண்டுமுறை ( அதாவது காலாண்டு , அரையாண்டு விடுமுறைகளில் ) நடத்த இதற்கு முழு ஒத்துழைப்பு தரும் ஒரு பள்ளியை தேர்ந்தெடுப்பது.

3 . இத்திட்டங்களை முன்னின்று நடத்திட சமுதாய அக்கறையுள்ள, தன்னலம் கருதாதவர்கள், நம் சமுதாய மக்கள் (அதிரை ) கல்வியில் மேம்பாடு பெறவில்லையே என்ற கவலையும் கொண்டவர்கள் மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைப்பது.

4 . பயிற்சியளிக்க தேர்ந்த பயிற்சியாளர்கள் (சகோதரர்கள்) நீடூர் மன்சூர் அலி , காயல்பட்டினம் செய்யது முகம்மது புகாரி மற்றும் புதுக் கல்லூரியில் பணி புரிந்த பொருளியல் பேராசிரியர் அப்துல் ரஹ்மான், டி.ஐ.ஜி. முஹம்மது அலி போன்ற கல்வியாளர்களை நமது ஊருக்கு வரவழைத்து கல்வி வழிகாட்டி பயிற்சிகள் நடத்துவது.

5 . இவற்றுக்கான பொருளாதாரம் - (செலவுக்கு) அதிரை நிருபர் சார்பாக அதன் வாசகர்கள் மனமுவந்து வற்புறுத்தல் இல்லாமல் அளிக்கும் நன்கொடைகள்.

இது நம்முடைய யோசனையே , இதற்கு பகரமாக மற்ற நமது சகோதரர்களின் ஆலோசனைகளுக்கு தான் முன்னுரிமை.

இறைவன் நமக்கு தந்த இந்த கல்வி என்ற செல்வத்தை கொண்டு நம் வருங்கால சந்ததியினர் நம் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட மேற்ச் சொல்லப்பட்ட திட்டங்களோடு தொடர்ந்து எம்மோடு கைகோர்க்க தயார் என்றவர்களும், நம் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களும் தங்களுடைய எண்ணங்களையும் , வகுக்கப்படும் திட்டங்களை எவ்வகையில் செயல்படுத்தலாம் என்கிற பயனுள்ள யோசனைகளையும் உங்களின் ஆதரவையும் தெரிவிக்கவும்.


முக்கியமான விஷயம் நம் அதிரையில் நல்லென்ன நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்ய யார் யாரெல்லாம் முன் வந்தாலும், முதலில் விமர்சனங்களும், குறை தேடிச் சொல்லும் போக்குகளும், அவர்களின் ஆக்கபூர்வமான செயலின் ஆர்வத்தை குறைக்கும் செயல்களும் வெகுண்டெழும் என்பது எமக்கு நன்றாக தெரிந்ததே இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தையும் எதிர்கொண்டு நம்மால் முயன்ற எல்லா வகையான முயற்சிகளையும் நம் (அதிரைச்) சமுதாய மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அதிரை நிருபர் குழுவும் முன்னின்று செய்யும் என்ற உறுதியை இங்கு பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்.


--சரபுதீன் நூஹூ மற்றும் அதிரைநிருபர் குழு

Aug 17, 2010

அன்புச் செல்வங்களுக்கு...பகுதி-2

சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பொதுஅறிவு
தொகுப்பு: அபுபிலால்

1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முஹர்ரம்,
2. ஸபர்,
3. ரபிவுல் அவ்வல்,
4, ரபிவுல் ஆகிர்,
5, ஜமாஅத்துல் அவ்வல்,
6. ஜமாஅத்துல் ஆகிர்,
7. ரஜப்,
8. ஷாஃபான்,
9. ரமழான்,
10. ஷவ்வால்,
11. துல் கஅதா,
12. துல் ஹஜ்.

5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.
2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.
3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)

7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்

9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி

12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை

13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)

19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)

20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)

24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)

29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

35. திருக்குர்ஆன் - இறைவேதம்



36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு


நன்றி: ஒற்றுமை இணையதளம் மேலும் நல்ல தகவல் நிறைய உள்ளது இத்தளத்தில், அனைவரும் சென்று பார்த்து பயனடையுங்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More