Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Showing posts with label loan. Show all posts
Showing posts with label loan. Show all posts

Dec 2, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 9

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! முன் தொடர்களில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கத்தை பார்த்து விட்டு பிறகு தொடரலாம். கடன் கட்டுரை தொடங்கி 8 தொடர் வெளிவந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்! நாடுகள் வாங்கும் கடன், வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை (Credit Card), வளைகுடாவில் காலடி வைப்பதற்கு முன்னும் பின்னும் நாம் வாங்கும் கடன்கள், சகோதர சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள், தாயகத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து வளைகுடா நாட்டில் உள்ளவர்களுக்கு வந்த பலதரப்பட்ட கடன் மனுக்கள், ஆடம்பர கடன், நகை கடன்கள், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன், குர்பானிக்காக வாங்கும் கடன், திருமண(வலீமா)கடன், திருமண கடன்கள், சகோதரிகள் வாங்கும் கடனால் நிம்மதியற்று தவிக்கும் கணவர்கள், கடன் எனும் நிழல் கூட தன் மீது விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி இவைகள் அனைத்தையும் பார்த்தோம்.

இனி தீர்வுகளில் அல்லாஹ்விற்காக அழகிய கடன் பிறருக்கு நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும். மேலும் கடனை வாங்குபவர்களின் நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். இதுவரை கடன் வாங்காதே என்று கூறிவிட்டு இந்த தொடரில் கடன் வாங்குவதை ஊக்கப்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கம் கடன் வாங்குவதைப் பற்றியும், கொடுப்பதைப் பற்றியும் விவரித்து அதற்கான வழிமுறைகளையும் நமக்கு தெளிவாக்குகிறது. அதை மார்க்க வழிமுறைகளில் பார்ப்போம்.

நாம் தொழுவது எதற்காக?

வல்ல அல்லாஹ் தொழுகையை கடமையாக்கி நம்மை ஜமாஅத்தோடு தொழச்சொல்கிறான். தனியாக ஒருவர் தொழுவதை விட பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவது பற்றி நபி(ஸல்) அவர்கள்: தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தி ஏழு மடங்கு சிறப்பானதாகும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.(புகாரி,முஸ்லிம்).

ஜமாஅத்துடைய ஒருங்கிணைப்பின் மூலம் நாம் நன்மையை பெற்றுக்கொள்வதோடு, மனித நேயத்துடன் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சியும் கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. பள்ளிக்கு வரும் சகோதரர்களிடம் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையை மறந்து சகோதர உணர்வுடன் பழகி அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பை இந்த ஜமாஅத் தொழுகை ஏற்படுத்திக் கொடுக்கிறது. (தற்பொழுது உள்ள தொழுகைகள் நாமும் முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ளவும். நமது கடமை தொழுவது மட்டுமே என்பதற்காகவும் இருப்பதுபோல் எண்ணத்தோன்றுகிறது).


நன்மை எதில் உள்ளது?

வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன்:2:177)

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும். உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 4:36)

இந்த இரண்டு வசனங்களும் நன்மை எதில் கிடைக்கும் என்பதையும், பிறர் நலன் நாடுவதையும் தெளிவாக விளக்குகிறது. நாம் பள்ளிக்குச் சென்று தொழுத பிறகு அங்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் மட்டும் பேசி விட்டு வந்து விடுகிறோம். அங்கு வருகின்ற மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் நம்மிடம் இல்லாமல் இருக்கிறது. வல்ல அல்லாஹ் மனித நேயத்தை மிக மிக அதிகமாக வலியுறுத்தி கூறுகிறான். இஸ்லாம் மனித நேயத்தை மிக வலுவாக போதிக்கிறது என்பது நமக்கு சரியான முறையில் கற்றுத்தரப்படவில்லை.

நாமும் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை. முயற்சி செய்யாததற்கு காரணம் என்னவாக இருக்கும் : உலக வாழ்க்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்வது இதற்காகவே முழு நேரத்தையும் செலவழிப்பது. நம் சகோதரர்கள் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வார்த்தையை தயாராக வைத்திருக்கிறார்கள் என்ன அது? நேரம் இல்லை... (Busy அல்லது Too much Busy ).

இந்த வார்த்தையை எந்த வயது வரை சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறார்கள். நம் உயிர் உடலை விட்டுப்போகும் வரையா? நாம் என்ன நினைக்கிறோம்: தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், ஜக்காத் கொடுக்கிறோம், ஹஜ் செய்கிறோம் பிறகென்ன இஸ்லாத்தின் கடமை முடிந்து விட்டது. சொர்க்கம் சென்று விடலாம் என்று நமது வேலைகளை கவனித்து கொண்டு இருக்கிறோம். வல்ல அல்லாஹ் இவைகளை மட்டும் கடமையாக ஆக்கவில்லை. நிறைய பொறுப்புகளை நம்மீது சுமத்தியுள்ளான். அவைகளில் மிக முக்கியமானது பிறர் நலன் நாடுதல்.

பிற மத சமுதாயத்தவர்களின் உதவி எவ்வாறு உள்ளது?

பிற மதத்தில் சில சமுதாயங்கள் தங்கள் இனத்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் அந்த குடும்பத்தில் ஒருவரை தன் கடையிலேயே வேலைக்குச் சேர்த்து சிறிது காலம் கழித்து அவன் சொந்த கடை வைக்கும் அளவுக்கு தயார் செய்து வெளியே அனுப்பி கடனாகவோ அல்லது தருமமாகவோ உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும் அறக்கட்டளைகள் ஆரம்பித்து இதன் மூலமும் தொழில் வைக்க உதவி செய்து வருகிறார்கள்.

அசத்திய கொள்கையை கடைபிடிப்பவர்களிடம் உள்ள உதவும் மனப்பான்மை, சத்திய கொள்கையை பின்பற்றும் நம்மிடம் எங்கே சென்றது? (முழுவதுமாக இல்லாவிட்டாலும், நம்மிடமும் சில உதவிகள் அமைப்பு ரீதியாக மக்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது தனித்தனியாக).

அழகிய மனித நேயத்திற்கு சொந்தக்காரர்களின் நிலை என்ன?

அழகிய மனித நேயத்திற்கு இஸ்லாம்தான் சிறந்த மார்க்கம் என்று நாம் சொல்லிக்கொண்டு, இஸ்லாமிய பெயர்களை சூட்டிக்கொண்டு, இஸ்லாம் காட்டிய மனித நேயத்தை கடைபிடிக்க முயற்சிகள் செய்திருக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பழகியவர்கள் மீது நாம் வைத்துள்ள அன்புகள் எவ்வாறு உள்ளது : திருமணத்தில் கலந்து கொள்வது, மரணம் அடைந்தால் சென்று பார்த்து வருவது இத்தோடு முடிந்து விடுகிறது. உறவுகளும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதை அறிந்து கொண்டே அவர்களுக்கு உதவ மனம் இல்லாமலும், மழைபெய்தால் தங்கள் வீடுகளுக்குள் மழை பெய்வதை தடுக்க வழியற்று தவிக்கும் ஏழைகளை கண்டு கொள்ளாமலும், நாம் மட்டும் நமது வீட்டு சுவரிலும், தரையிலும் மார்பிள், கிரணைட் கற்களால் அலங்கரித்து, வீடு என்ற பெயரில் ஆடம்பர பங்களாக்களை (வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 அல்லது 3 இருந்தாலும் ஜின்கள் வந்து குடியிருப்பதற்காக பல அறைகளையும்) கட்டிக்கொண்டும், பிற தேவையற்ற காரியங்களையும் நிறைவேற்றி நம் உறவுகளுக்குள் உள்ள ஏழைகளையும், உறவில் இல்லாத நம்மைச் சுற்றி உள்ள ஏழைகளையும் மறந்து வாழ்ந்து வருகிறோம்.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நமது சமுதாயத்தில் உள்ளவர்களின் நிலையை பார்த்தால் தாம் மட்டுமே எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்பது போல் பலரின் நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டளவில் நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்களின் வீட்டு திருமணங்களை தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன் நண்பர்கள் மூலமும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த செல்வந்தர்கள் இப்படி வாரி இறைத்து செலவழிக்கிறார்களே என்ற வேதனை ஏற்படும். அவர்களின் தெருவில் ஏழைகள் இல்லையா, இல்லை ஏழைக்குமர்கள் முதிர்கன்னியாக இல்லையா? ஒரு செல்வந்தர் வீட்டு திருமண செலவில் 10 ஏழைக்குமருக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாமே. இந்த செல்வந்தர்களின் நெஞ்சில் ஈரம் இல்லையா? மறுமை பயம் இல்லையா? இப்படி இவர்கள் இஸ்லாமிய பெயர்தாங்கியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

வல்ல அல்லாஹ் ஒரு மனிதனின் குடும்ப செலவுக்கும் மற்ற தேவைகளுக்கும் 25ஆயிரம் ரூபாய் போதுமானதாக இருந்தும் 50ஆயிரம் அல்லது லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செல்வத்தை தந்தால் அந்த செல்வம் தனக்கே உரியது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தன்னுடைய அறிவுக்கும், திறமைக்கும், படிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். எல்லா அறிவாளிகளுக்கும், எல்லா படித்தவர்களுக்கும், எல்லா திறமைசாலிகளுக்கும் செல்வம் கிடைத்து விடுவதில்லை. (உதவி செய்து கொண்டு இருக்கும் செல்வந்தர்கள் சில பேர்தான் இருப்பார்கள்).

கைநாட்டு முதலாளியிடம் படித்தவர்கள் கை கட்டி சம்பளம் வாங்கும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். வல்ல அல்லாஹ்தான் தான் நாடியவருக்கு குறைவாகவும், அதிகமாகவும் செல்வத்தை வழங்குகிறான். அதனால் ஒருவருக்கு அவர் தேவைகள் போக மீதமிருக்கும் செல்வங்களில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. நாம் வல்ல அல்லாஹ் கூறியபடி நடந்தால் கடன்காரர்களை நமது சமுதாயத்தில் பார்க்க முடியுமா?

யார் கவலைப்படமாட்டார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2: 262)

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன்: 2:274)

வல்ல அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பது புரிகிறதா? நம் உறவுகளிலும், தெருக்களிலும் உள்ள சகோதர, சகோதரிகளின் நிலை அறிந்து அவர்கள் நம்மிடம் (அவர்கள் என்ன பெரிய ஆளா? நம்மிடம் வந்து கேட்கட்டுமே? அவர்கள் தேவைக்கு அவர்கள்தானே வந்து கேட்க வேண்டும் என்ற வசனங்களை பேசிக்கொண்டு இருக்காமல்) கேட்காமலேயே அவர்களுக்கு கடனாகவோ, தருமமாகவோ உதவி செய்ய வேண்டும். நாம் எப்படி இருக்கிறோம் யாரும் வந்து கடன் கேட்டால் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற பல கேள்விகளுக்கு இடையில் வேண்டா வெறுப்பாக உதவி செய்வோம் அல்லது இல்லை என்று சொல்லி விடுவோம். அவர்களின் வீண் ஆடம்பரத்திற்கான செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டியதில்லை. அவசிய அத்தியாவசியமான தேவைகளை நாம் நன்கறிந்து உதவி செய்யலாம்.

மேலும் வல்ல அல்லாஹ் என்ன கூறுகிறான்:

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! (அல்குர்ஆன் : 17:26)

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 17:27)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் நாம் உதவி செய்யவில்லை அவர்களின் உரிமையைத்தான் கொடுக்கிறோம் என்பதை வல்ல அல்லாஹ் எவ்வளவு அழகாக விளக்கியுள்ளான் என்பதை நம் ஆழ் மனதில் நன்கு பதிய வைத்துக்கொண்டால் கஷ்டப்படும் நம்மைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு கொடுக்கலமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டமான கேள்விகளுக்கு இடமே இருக்காது.

ஆனால் நம் சமுதாய மக்களோ விரயம் செய்து பிறருக்கு கொடுக்காது ஷைத்தானின் உடன்பிறப்புக்களாக மாறி வருவதைத்தான் அதிகம் காண முடிகிறது. நமது எண்ணங்களை மாற்றிக்கொண்டு வல்ல அல்லாஹ் கூறியபடி வாழ முயற்சிப்போம். இன்ஷாஅல்லாஹ்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்

Nov 25, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 8

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தியாகத் திருநாளை கொண்டாடி விட்டு வந்திருக்கும் நம் அனைவருக்கும் குர்ஆனையும், இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையையும் பின்பற்றி நடக்கவும், மார்க்கத்திற்கு முரணான அனைத்து வழிமுறைகளையும் விட்டு, ஹலால், ஹராமை பேணி மறுமை வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இம்மையில் வாழ்வதற்கு வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்த(துஆச் செய்த)வனாக என்னுடைய கட்டுரையை தொடங்குகிறேன்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் :2:208)

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன் : 2:201)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

இந்த தொடரிலும் சகோதரிகளைப்பற்றியே தொடர்ந்து வருவதால் சகோதரிகள் கவனமாக படியுங்கள். சில சகோதரிகள் கடன் எனும் கடலில் தனது கணவனை தள்ளி விட்டு கவலைப்படாமல் இருந்த நிகழ்ச்சிகளையும், அடுத்து கடன் எனும் கடலில் கணவனை விழாமல் காத்துக்கொண்ட பெண்மனியைப்பற்றியும் பார்ப்போம்.

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள்!

கணவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தாலோ தன்னிடம் உள்ள நகைகளை (அசையாத சொத்துக்கள் நிலங்களாக இருக்கும், இன்று அதிகமாக அசையும் சொத்துக்களாக இருப்பது தங்க நகைகள்தான்) கணவனின் கஷ்டத்திற்கு கொடுத்து உதவாமல் கணவன் வெளியில் உறவினர்களிடம் கடன்கள் வாங்கினாலும் பார்த்துக்கொண்டு கடன் உள்ளதே என்ற பொய் கவலையுடன் தன்னிடம் உள்ள நகைகளை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நடமாடும் சகோதரிகளைப் பற்றி என்ன சொல்வது? (கணவன் வாங்கி கொடுத்த நகைகளையும், சொத்துக்களையும் கொடுத்து உதவி செய்யவே மறுக்கிறார்கள்).

இப்படி நடந்து கொள்ளும் சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். கணவனுக்கு அதிக பொருளாதாரம் கிடைத்தால் யாருக்கு தரப்போகிறார்? கணவன் கடனோடு நடமாடுவதை பார்த்துக்கொண்டு இருப்பது நிம்மதியா? அல்லது போலி கௌரவத்திற்காக கணவனுக்கு உதவாமல் நகைகளோடு தாங்கள் நடமாடுவது நிம்மதியா? எது நல்லது?

ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள்!

கணவன் நல்லவனா? கெட்டவனா? என்பது மனைவிக்கு தெரியும். தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்கும் கணவனுக்கு உதவி செய்து சொத்துக்களை இழக்கலாமா? என்று சில சகோதரிகளின் கேள்வியாக இருக்கிறது. ஒரு தடவை உதவி செய்து பயனற்ற வழியில் செலவு செய்கிறார், மீண்டும் உதவி செய்கிறார். இப்படியே எல்லாவற்றையும் இழந்த சகோதரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களின் விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து, இருக்கும் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதில் கவனம் எடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஏமாறுவது புத்திசாலித்தனம் இல்லை.

பாலைவனத்தில் பிடித்து தள்ளிவிடும் சகோதரிகள்!

கணவன் வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருந்து பிறகு சில காலம் கழித்து உள்நாட்டில் தொழில் வைத்து தங்கி விடலாம் என்று யோசனை செய்து ஊரில் தங்கினாலும் அல்லது முடிவெடுத்தாலும் உடனடியாக எதிர்ப்பு மனைவியிடம் இருந்து வருவதை காண முடிகிறது. உடனே கணவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். என்ன காரணம் மாதா மாதம் பணம் வந்து கொண்டு இருந்தது. வித விதமான சேலைகள் வாங்கி, புதிய புதிய நகைகள் செய்து, தினமும் தொலைக்காட்சியில் வரும் சமையலை செய்து பார்த்துக்கொண்டும், மற்ற ஆடம்பர செலவுகளும் செய்து வந்த நிலை இனி பறி போய் விடுமே, என்ற மிகப்பெரிய மனக்கவலைதான் காரணமாக இருக்கிறது.

கணவன் ஊரோடு வந்து தங்கி விட்டால் முதலில் அடிபட்டு போவது இவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான். மிகச் சிக்கனமாக வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற பலவிதமான கவலை இவர்களை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. இவர்களின் நினைப்பு என்ன ஒரு வருடம், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கணவன் பெட்டி நிறைய துணிமனிகளும், நகைகளும் கொண்டு வர வேண்டும். இதைப்பார்த்து மனமகிழ்ச்சி அடைய வேண்டும். இதை தவிர வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை சகோதரிகளிடம் காண முடிகிறது. அதே நேரத்தில் கணவன் கடனாளியாக வருகிறானே என்ற அக்கரையெல்லாம் இவர்களிடம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று சொல்லி விடலாம். வருடா வருடம் வரும்பொழுது பெட்டியுடன் கடனும் சேர்ந்து வருகிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள். சகோதரிகளே! சிந்தித்து தெளிவுபெற்று கணவனுக்கு உறுதுணையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

காலமெல்லாம் கணவனை கடனோடு,
பாலவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள்!


ஒரு சகோதரருக்கு இருப்பதற்கு வீடு இருக்கிறது. ஆனால் ஓட்டு வீடாக இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டியே ஆக வேண்டும் என்ற தீராத லட்சியம் கணவரை தொந்தரவு செய்கிறார். இவரின் வருமானத்தில் உடனடியாக வீடு கட்ட முடியாது. மனைவியிடம் சில காலம் ஆகும் என்கிறார். ஆனால் கணவனின் பேச்சை மீறி கூட்டுறவு வங்கியில் வீட்டுக்கடன், கணவனையும் அவருடைய NRE கணக்கு உள்ள வங்கியில் கடன் வாங்கி மாடி வீட்டை கட்டி முடித்து விட்டார். சரி வீடு கட்டியாகி விட்டது. வீட்டில் நிம்மதியாக இருந்து கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணம் வந்ததா? அதுதான் இல்லை. அடுத்த முறையீடு ஆரம்பமாகிறது...

என்ன அது, விரைவில் நகைகள் சேர்க்க வேண்டுமாம். கணவனின் பதில்... வீடு கட்டிய கடன்கள் அடைந்த பிறகு நகைகள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் அந்த சகோதரி சொல்வதை பாருங்கள். கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் அதற்காக நகைகள் வாங்காமல் இருக்க முடியுமா? என்ற அழகான பதிலை தருகிறார். கணவனோ என் வாழ்நாளில் இந்த கடன்கள் அடைந்து விடுமா? என்ற சந்தேகத்தில் புலம்பிக் கொண்டு நிம்மதியற்று தவிக்கிறார் வளைகுடாவில்.

சகோதரிகளே! கடன் வாங்கித்தான் வீட்டை கட்ட வேண்டும், நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபடுங்கள். தங்களின் நிர்பந்தத்திற்காக கடன் வாங்கிய தங்கள் கணவர்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியற்று வாழ்வார். இது நியாயமா?

இன்னொரு சகோதரியைப்பற்றி பார்ப்போம் இவருக்கு எவ்வளவு பணம் அனுப்பினாலும் பண பற்றாக்குறை. அடுத்த மாதம் பணம் கூட வேண்டும் என்கிறார். பண பற்றாக்குறைக்கு வித விதமாக உணவு செய்து சாப்பிடுவது காரணம் இல்லை. இவருக்கு ஒரு மன வியாதி என்ன தெரியுமா? ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். உள்ளுர் டாக்டரிடம் காண்பித்தால் சின்ன சின்ன நோய்கள் குணமாகாது. அடுத்த ஊரில் உள்ள பீஸ் அதிகமாக வாங்கும் டாக்டரிடம் (கைராசி டாக்டர்) காண்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண தலைவலி, வயிற்றுவலி குணமடையும். இவருக்கு வந்தது உண்மையில் நோயா? இல்லை மன நோய்.

சாதாரண தலைவலியைக்கூட பெரிதாக போட்டு குழப்பி கொள்வதால் கண்ட பலன் : இவருக்கு டாக்டர் தரும் மருந்தால் பக்க விளைவு நோய் லாபம், டாக்டருக்கோ ஏதாவது ஒன்றில் குணமாகட்டும் என்ற மருந்து பட்டியலால் (மளிகை கடை பட்டியல் போல்) லாபம், கணவருக்கோ கடனாளி என்ற பெயர் லாபம்.

கணவர் தனக்கு உடம்புக்கு முடியாமல் போனாலும் உடனே டாக்டரிடம் போகாமல் மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, பக்குவமாக இருந்து செலவு அதிகமாகி விடுமே என்று முடிந்தவரை டாக்டரிடம் காண்பிப்பதை தவிர்த்துக்கொள்கிறார். கஷ்டப்படும் கணவரே சிக்கனமாக இருந்து தவிர்த்துக் கொள்ளும்பொழுது நிழலில் இருக்கும் மனைவி எப்படி இருக்க வேண்டும். (அதற்காக டாக்டரிடம் காட்டாமல் இருந்து விடாதீர்கள்).

இந்த நேரத்தில் நம் ஊர் வாடகை வாகன ஓட்டி சொன்னதை நினைவு கூர்கிறேன்: நம் ஊரைச்சேர்ந்த சகோதரிகள் திருச்சிக்கு சென்று துணிமனிகள் எடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் தொந்தரவு தரும் பல்லை எடுப்பதற்கு தஞ்சை தனியார் பல் மருத்துவ மனைக்கு சென்று இருக்கிறார்கள். (முன்கூட்டியே தொலைபேசி மூலம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்). மருத்துவரின் பீஸ் எவ்வளவு தெரியுமா? 3ஆயிரமாம், மேலும் அங்குள்ள நர்ஸ்க்கு 200ரூபாய் கொடுத்தார்களாம். வாகன ஓட்டி அவர்களிடம் கேட்டது ஏன் பட்டுக்கோட்டையில் மருத்துவர் இல்லையா? என்றதற்கு அங்கெல்லாம் சரியான முறையில் எடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்களாம். அவர் சொன்னது: காக்கா பட்டுக்கோட்டையில் 300ரூபாய்க்குள் இந்த பல்லை எடுத்து விடலாம். முள்ளங்கி பெற்றது போல் பணத்தை எண்ணி கொடுக்கும்பொழுது எனக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது என்றார். இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் அந்த வாகன ஓட்டி காலையில் திருச்சிக்கு புறப்பட்டு அங்கு மதியம் வரை அவர்கள் வாங்கிய பொருட்களை வேலைக்காரனை போல் சுமந்து கொண்டு வந்து சேர்த்து பின் தஞ்சாவூர் வந்து பல் மருத்துவம் செய்து விட்டு பிறகு இரவு திரும்பி ஊர் வந்து வீட்டுக்கு விடும்பொழுது எனக்கு 10ரூபாய் கொடுத்தார்கள் காக்கா நான் ஏன் இதை கொடுக்கிறீர்கள் இதையும் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னார். டாக்டருக்கு கொடுக்க மனம் வருகிறது, அங்குள்ள நர்ஸ்க்கும் கொடுக்க மனம் வருகிறது. காலையிலிருந்து கஷ்டப்பட்ட வாகன ஓட்டிக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை. (அவரின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்). (இந்த பணத்தை சம்பாரிக்க இவர்கள் வீட்டு ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்).

வீண் விரயத்தை விரும்பக்கூடிய சகோதரிகளே! எந்தக் காரியத்திலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். டாக்டர் தொழில் என்பது புனிதம் என்று கூறிய காலம் போய் விட்டது. லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து படித்து விட்டு வந்து போட்ட பணத்தை எடுக்க வேண்டும் (விதி விலக்காக நல்ல டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) என்ற வியாபார நோக்கில் சேவை மனப்பான்மை அடிபட்டு பணம் ஒன்றே குறிக்கோளாகி விட்ட உலகத்தில் இருக்கிறோம் என்பதையும், தங்கள் கணவர் படும் கஷ்டங்களையும் மனதில் நினைத்து கைமருந்து சாப்பிட்டால் குணமாகும் என்ற நோய்களுக்கெல்லாம் மருத்துவரிடம் காண்பித்து வீண் விரயம் செய்யாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு சிக்கனமாக இருந்து கணவனை கடன் என்னும் கடலில் மூழ்க விடாமல் பார்த்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

கடன் எனும் நிழல் கூட தன் மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி!

கணவர் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை வீண் விரயம் செய்யாமல் எப்படியெல்லாம் சிக்கனமாக செலவு செய்ய முடியுமோ அவ்வாறெல்லாம் சிக்கனமாக இருந்து கணவர் ஊர் செல்லும்பொழுதெல்லாம், கடன் வாங்க விடாமல் தாம் சேமித்து வைத்த பணத்தை கையில் கொண்டு வந்து கொடுத்து உங்கள் பணம் செலவழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தானும் கடன் வாங்காமல், கணவனையும் கடன் வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்து வாழும் மனைவி. இவரைப்போல் சில பேர் இருக்கலாம். (எனக்குத் தெரிந்து இப்படி கடனே இல்லாமல், கணவரையும் கடன் வாங்க விடாமல் வாழ்பவர் என்னுடைய மனைவிதான் அல்ஹம்துலில்லாஹ்!).

சகோதரிகளே! தாங்களும் இப்படி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிக்கனத்தை கடைபிடித்து தாங்களும் கடன் வாங்காமல் தங்கள் கணவரையும் கடனுக்குள் விழுவதை தடுத்து வாழ ஆரம்பித்தால் தங்களுக்கும் - கணவருக்கும் மன நிம்மதி அளிக்கும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- S. அலாவுதீன்

கடன் வாங்கலாம் வாங்க 7                                          கடன் வாங்கலாம் வாங்க 9

Nov 11, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 7

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இப்பொழுது 7வது தொடரை வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளால்  படிக்கத் தொடங்குகிறீர்கள்.

இந்த தொடர் எனக்கு ஒரு சோதனையான தொடர் காரணம் சில சகோதரர்களிடம் இந்த வாரத்தில் சில கடன் சம்பந்தப்பட்ட காரியங்களைப் பற்றி விவாதம் செய்து கிடைத்த பதிலால் நாம் இந்த கட்டுரையைத் தொடரத்தான் வேண்டுமா? (உபயம் சகோதரர்: அபுஇபுறாஹிம்). எங்கும் கடன், எதிலும் கடன் இதிலிருந்து விடுபடுவார்களா? மாட்டார்களா? நாம் எழுதுவதால் நம் சமுதாயம் பலன் அடையுமா?  என்றெல்லாம் மனக்குழப்பம்.

வல்ல அல்லாஹ்வின் அருளால் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனமும், நபிமொழியும் மனதில் வர கட்டுரையை தொடருவோம் என்ற மன உறுதியை கொடுத்தது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன் : 3:104)

நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!. (அல்குர்ஆன் : 3:110)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன்கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல் : முஸ்லிம்)

(குழப்பத்திற்கு என்ன காரணம் என்பதை குர்பானியை பற்றி தெளிபு படுத்திய பிறகு தொடர்வோம்).

ஹஜ் பெருநாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. குர்பானி கடன் வாங்கியும் வீண் பெருமைக்காகவும், கொடுக்கப்படுவதால் இதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் நாம் அனைவரும் பிராணியை பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். (இதன் விரிவான விளக்கத்தை குர்ஆனில் 37வது அத்தியாயம் அஸ் ஸாஃப்பாத் 99முதல் 110 வரை படியுங்கள்).

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகனையே அல்லாஹ்விற்காக பலியிட முன்வந்தார்களே அதைப்போன்று நாமும் தியாகத்தை செய்வதற்கு முன்வருவோம் என்பதை நிருபிக்கும் வண்ணம் குர்பானி கொடுக்கிறோம். இறையச்சத்தின்  வெளிப்பாடுதான் குர்பானி.

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடைகிறது. (அல்குர்ஆன் : 22:37)


குர்பானி யார் கொடுக்கலாம்:
யாரிடம் அவர்களின் செலவு போக, கடன்கள் எதுவும் இல்லாமல் அதிகமாக பணம் இருக்கிறதோ அவர்தான் குர்பானி கொடுக்க வேண்டும். கடன் இருந்தால் முதலில் கடனைத்தான் கொடுக்க வேண்டும். அதனால் குர்பானி மட்டும் இல்லை ஹஜ்ஜாக இருந்தாலும் வேறு கடமையான எந்தக்காரியமானாலும் கடன் வாங்கி செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை.
  
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 3498)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்துகொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 7288)

நபி (ஸல்) அவர்கள் தடுத்தக் காரியங்களை முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் கட்டளையிட்டால்  அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.
  
வசதியில்லாதவர் கடன் வாங்கி சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை: வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியது.(அல்குர்ஆன் : 2:286) (காலம் காலமாக கொடுத்து வருகிறோம். அதனால் நிறுத்தக்கூடாது என்று கடன் வாங்கி குர்பானி கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும்).


நபி (ஸல்) காலத்தில் ஒருவர் தன் சார்பகவும் தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை மட்டும் குர்பானி கொடுப்பார் என அபூ அய்யூப் (ரலி) கூறுகிறார்கள். (திர்மதி இப்னுமாஜா)

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதுமானது. வீண் பெருமைக்காகவும், கடன் வாங்கியும் செய்யப்படும் குர்பானிக்கு வல்ல அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: புகாரி, 5560)

ஆகவே சகோதர சகோதரிகளே வல்ல அல்லாஹ் கூறியபடியும், நபி(ஸல்)அவர்கள் காட்டி தந்தபடியும் நமது குர்பானியை கொடுத்து நன்மையை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

திருமண (வலீமா) கடன்கள்:
ஒரு சில சகோதரர்களிடம் நான் விவாதித்த செய்திகளை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஒரு சகோதரர் திருமணத்திற்கு ஊர் செல்கிறார். பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்காக நகை வாங்கியுள்ளார். (நல்ல செய்திதானே) திருமணம் ஆன பிறகு வலீமா விருந்து மாப்பிள்ளைதான் கொடுக்கப்போகிறார்.(மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பாரா? பெண் வீட்டில் வலீமா விருந்தை சாப்பிட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்). இவை அனைத்தும் மார்க்கம் சொன்னபடி செய்கிறார், பாராட்டப்பட வேண்டிய செயல். ஆனால் இவை அனைத்திற்காகவும் கடன் வாங்கியுள்ளார். இதைத்தான் பாராட்ட முடியவில்லை.

ஊருக்கு செல்வதற்கு இவர் திருமணத்திற்கு போடும் கோட் முதல் மற்ற அனைத்து பொருட்களும் அதிகமான விலை கொண்டதே. கடன் அட்டையில்தான் அதிக கடன். வீட்டுக்கு போன் செய்யும்பொழுது நான் அதிக கடன் வாங்கி விட்டேன், வந்து திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார். ரூம் வாடகை கூட ஊர் போய் வந்து கொடுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு கடன்.

என்னுடைய கேள்வி இப்படி கடன் வாங்கித்தான் இதையெல்லாம் செய்யவேண்டுமா? இவர் வாங்கியுள்ள பொருட்களை குறைத்திருக்கலாம். அதிக விலையுள்ள பொருட்களை வாங்கியதை தவிர்த்திருக்கலாம். அவருடைய வருமானம், சேமிப்புக்கு  தக்கவாறு திட்டமிட்டு திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கலாம். எத்தனை லாம் எல்லாம் கடனில் அடி வாங்கிவிட்டது. கடன் வாங்கியது அவர் மனதிற்கு உறுத்தலாக இருந்தாலும், வாங்காமல் செல்ல மனம் இல்லை. நம் இரத்தத்தோடு இந்த கடன் மட்டும் பிரிக்க முடியாத அணுக்களாகி விட்டது. ( இவருடைய உறுத்தலுக்கு தீர்வு என்ன? )

இன்னொரு சகோதரரைப்பற்றி பார்ப்போம் மேலே சொன்னதுதான் இவர் குடும்பத்தில் மகனுக்கு  திருமணம். மார்க்கத்தில் பிடிப்பு அதிகம். மகன் திருமண செலவுக்காக கடன் வாங்க முற்படுகிறார். திருமணத்தை லட்சத்திலும் செய்யலாம் சில ஆயிரத்திலும் செய்யலாம். அவரவர் தகுதிக்கு திருமண காரியங்களை நடத்த ஆசைப்படுவது மனித இயல்புதான். வீண் பெருமைக்காகவும், குலப்பெருமைக்காகவும், செல்வந்தர் என்று காட்டிக்கொள்வதற்காகவும், சமுதாயத்தில் அந்தஸ்தில் இருக்கிறோம் இதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவும் குடும்பத்தின் திருமண  காரியங்கள் மண்டபம், பிரமாண்டமான பந்தல் மற்றும் வேறு ஆடம்பரங்களோடும் நடந்து கொண்டு இருக்கிறது.

எத்தனை சொன்னாலும் ஆடம்பரத்தை  விட தயாராக இல்லை. இதற்காக ஏன் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் கலங்கி நிற்க வேண்டும். சரி கடன் வாங்கி விட்டார். இவர் மேல்  மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்களும் கடன் கொடுத்து விட்டார்கள். திருப்பி தருகிறேன் என்று சொன்ன கால கட்டத்தில் திருப்பி தருவார் என்று இவருக்கு கடன் கொடுத்த உறவினர்களோ, நண்பர்களோ நாம் கொடுத்த கடன் இத்தனை மாதத்திற்கு பிறகு நமக்கு வரும் நம்முடைய தேவையை அந்த நேரத்தில் நிறைவேற்றிக்கொள்வோம் என்று ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். (கோடீஸ்வரனுக்கும், ஏழைகளுக்கும் தேவைகள் இருக்கிறது. எந்த தேவையும் இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை, ஏதாவது ஒரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும்).

அந்த நேரத்தில் அந்த நண்பர், உறவினர் பணத்தை திருப்பித்தரவில்லை. இப்பொழுது கடன் கொடுத்தவருக்கு கடன் வாங்கியவர்கள் மேல் ஒரு வித வெறுப்பு (உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்) ஏற்படுவது இயல்பு. (இல்லையென்று சொல்ல முடியாது) வெளியே சொல்ல முடியாமல் மனதில் போராட்டம். நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பன் என்று மனது எடைபோட்டு போனால் போகிறது என்று விட்டு விடாது. நம் மனம் நம்மை சவுக்கால் அடிக்கும் அதெப்படி தருகிறேன் என்று சொல்லி விட்டு வாக்கு மீறுவது. இப்பொழுது நம்முடைய தேவையை எப்படி நிறைவேற்றுவது நம்முடைய பணம் அவனிடம் இருக்கும்பொழுது நாம் ஏன் மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டும் தலையெழுத்தா? என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பெரும் போர் நடந்தாலும், நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ? நேரடியாக கடுமையாக கேட்க மனம் வராது. (இப்பொழுது கடன் கொடுத்தவர்கள் படும் மனப்போராட்டதிற்கு தீர்வு என்ன?)

இந்த நேரத்தில் தமிழகத்தின் மிகச்சிறந்த இளவயது (ஆலிம்)  மார்க்கப்பேச்சாளரின் திருமணம்  ஞாபகத்திற்கு வருகிறது. இவரின் திருமணத்தை வெறும் ரூ500க்குள் நடத்தியிருக்கிறார். என்னுடைய வருமானம் மிக குறைவு அதனால் வலீமா விருந்து  டீ, பேரீத்தம்பழம் (பிஸ்கெட் கொடுத்தாரா என்பதை மறந்து விட்டேன்) கொடுத்து திருமணத்தை முடித்து விட்டார். இவர் கடன் கேட்டால் தருவதற்கும், அன்பளிப்பாக தருவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் கையேந்தாமல், இறையச்சம் உடையவராக இருந்த காரணத்தால், அவரின் வருமானத்திற்குள் திருமணத்தை முடித்துவிட்டார். (அதெப்படி பிரியாணி போடாமல் ஒரு திருமணமா? இந்த திருமணத்திற்கு போய் என்ன செய்ய? டீ குடிக்கவா? மக்களிடம் கேள்வி? )

திருமண கடன்கள்:
ஒரு சகோதரரிடம் வேறொரு சகோதரர் வந்து என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து விட்டேன். உதவி செய்யுங்கள் என்று சொன்ன பொழுது இவர் விபரங்களை கேட்டுள்ளார். மாப்பிள்ளை வீடுதான் எல்லாம் செய்கிறார்கள் இருந்தாலும் நாங்களும் செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்டிருக்கிறார். இந்த சகோதரர் பெண் வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது. உனக்கு உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். (இவர் சொன்னது சரிதானா? இப்படிப்பட்டவர்களுக்கு தீர்வு என்ன? ).


என்னிடமும் ஒரு சகோதரர் அவர் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. நபிவழிப்படிதான் திருமணம் நடக்கிறது. எனக்கு உடனே பணம் அனுப்பி வையுங்கள் என்று தொலைபேசியில் சொன்னார். (ஒரு தடவை இவர் நிலையை பார்த்து நானாக உதவி செய்யப்போய், எப்பொழுது ஊருக்கு போனாலும் அல்லாஹ்வுக்காக கடன் கொடுங்கள் என்று கேட்பார். அவரால் திருப்பி கொடுக்க முடியாது என்பது அவருக்கே தெரியும்). (நிறைய பேரிடம் இப்படித்தான் கேட்கிறார் என்பதை நண்பனின் மூலம் பிறகு தெரிந்து கொண்டேன்). என் வீட்டிற்கு போன் செய்து உண்மை நிலை என்ன என்று கேட்கும்பொழுது அவருக்கு ஒரு செலவும் இல்லை மாப்பிள்ளையே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார் என்று சொன்னார்கள். மேலும் எத்தனை பேரிடம் மகளுக்கு திருமணம் என்று பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. (விசாரிக்காமல் கேட்டவுடன் உதவி செய்து விடுவதா? இது போன்றவர்களுக்கு தீர்வு என்ன?)

என் வீட்டிலும் தெரிந்த பெண்ணிற்கு திருமணம் வருகிறது நம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என்றார்கள். மார்க்கப்படி வரதட்சனைக்கு துணை போகக்கூடாதே என்று சொன்னேன். அப்படி என்றால் அந்த பெண்ணிற்கு திருமணமே ஆகாது, நாம் விருந்து செலவை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி விருந்து செலவை ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்தார்கள். பெண் வீட்டாரும் வெட்கத்தை விட்டு வெளியில் உதவி கேட்டார்கள் பெண்ணின் தாய் மாமா மற்றும் சில பேரின்  உதவியால் திருணம் முடிந்தது. (வரதட்சனைக்கு துணை போகிறோமே இதற்கு என்ன தீர்வு? )

சில பேர் திருமணத்தை நிச்சயம் செய்து விட்டு பலபேரிடம் வசூல் செய்து திருமணத்தை நடத்துகிறார்கள்? (இது சரியா? இதற்கு என்ன தீர்வு?) நமது உறவுக்குள்ளும், வெளியிலும் பெண்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களும், உறவுகளும் நம்மிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு உதவுவது பற்றிய விவாதத்தில் வருகின்ற கேள்விகள். நம்மால் ஆன உதவிகளை செய்யாவிட்டால் மாப்பிள்ளை வீட்டார் எங்கு வரதட்சனை கிடைக்கிறதோ அங்கு பெண் பார்த்து மணம் முடித்து விடுவார்கள். நமக்கு தெரிந்தவர், உறவினர் வீட்டு பெண்களுக்கு உதவி செய்யாவிட்டால் காலம் முழுக்க முதிர்கன்னியாக வீட்டில்தான் இருக்க நேரிடும்.

மார்க்கம் மஹர் கொடுத்து மணம் முடிக்க சொல்லி இருக்கிறதே? நாம் மஹரை பெண்ணிடம் இருந்து அல்லவா வாங்குகிறோம். மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள். நம் சமுதாயம் உதவி செய்யும் என்ற எண்ணத்தில்தான் பெண்ணை பெற்றவர்கள் அவர்களுக்கு வசதி இல்லாமல் இருந்தாலும் மாப்பிள்ளை வீடு கேட்பதை தருகிறோம் என்று ஒத்துக்கொள்கிறார்கள். வரதட்சணை என்பது மிகப்பெரிய பாவம் இதற்கு துணை போகாதீர்கள். கடன் கொடுத்தோ, உதவியாகவோ செய்ய வேண்டாம், வரதட்சனை வாங்கும் கூட்டம் பெருக நீங்கள் ஒரு காரணமாக இருக்கிறீர்கள், வரதட்சனை வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதியான நிலை எடுக்க வேண்டும். குறிப்பாக கொடுக்கவே மாட்டோம் என்று மிக உறுதியான முடிவை பெண் வீட்டார் எடுக்க வேண்டும், பாவத்தில் பங்காளியாக வேண்டாம் என்கிறார்கள். (நமக்கு என்ன தீர்வு துணை போவதா??? வேண்டாமா??? )

வசதி இல்லாத பெண்களுக்கு வரதட்சனை கொடுப்பதற்கு நம்மால் ஆன உதவிகள் செய்யாவிட்டால் பெண் முதிர் கன்னியாக இருந்து விடுமே இதற்கு என்ன தீர்வு?. நம் சமுதாயத்தின் இளைஞர்கள் இப்பொழுதுதான் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் இளைஞர்கள வரும் வரை காத்திருக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். நாம் இக்கட்டான நிர்பந்தத்தின் பேரில்தான் வரதட்சனை திருமணத்திற்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். (நாம் செய்வது சரிதானா? நாம் எப்பொழுது நிர்பந்தத்தில் இருந்து வெளிவருவது?)

ஆண் மக்களைப்பெற்றவர்களே, இளைய சமுதாயமே தாங்கள் எப்பொழுது விழிப்புணர்வு அடைவீர்கள். தாங்கள் கேட்கும் வரதட்சனையால் பெண் வீட்டார் உதவி செய்பவர்கள் என்று எல்லோருமே பாவத்தில் பங்காளியாகி விடுகிறார்கள். நிர்பந்தம் என்ற நெருப்பில் அனைவரையும் பிடித்து தள்ளிய உங்களுக்கு வல்ல அல்லாஹ்விடம் என்ன தண்டனை காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.

பெற்றோர் மேல் பழி போடும் இளைய சமுதாயமே வரதட்சனை திருமணம் வல்ல அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியது. வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தவர்கள் எத்தனை சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தில் பரக்கத்தை அல்லாஹ் தாரளமாக தந்திருக்கிறான் என்பதையும்,  வரதட்சனை வாங்கி திருமணம் முடித்தவர்களின் பொருளாதாரம் பரக்கத்(அபிவிருத்தி) இல்லாமல் குறைந்து கொண்டே வருவதையும் தாங்கள் பார்த்து இருக்கலாம். பார்த்தது இல்லை என்றால் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.   வரதட்சனை வாங்கி பெண் வீட்டாரை கடனிலும், அடுத்தவரிடம் கையேந்தும் இழிவிலும் தள்ளிவிடாதீர்கள்.

வரதட்சனை என்று பெண் வீட்டார் கடன் வாங்குவதிலிருந்தும், பெண்ணுக்கு மஹர் கொடுக்கிறேன் என்று மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் கடன் வாங்குவதிலிருந்தும் விலகி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையுங்கள். 

அன்பு அதிரை நிருபர் குழு மற்றும் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய (Advance) ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன் . S.


<---கடன் வாங்கலாம் வாங்க 6                          கடன் வாங்கலாம் வாங்க 8 --->  

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More